பரிசல்காரன்

ரசிப்போர் விழி தேடி...

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...

உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.
உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!

நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.
உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?
ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!

உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.

ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.

என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?

என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!
வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!

நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...
இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!

அன்புடன்...
உன் அப்பா.

48 அலசல்கள்...:

வெட்டிப்பயல் 11 July 2009 11:11 AM  

நான் தான் ஃபர்ஸ்டா?

வெட்டிப்பயல் 11 July 2009 11:16 AM  

படித்து முடிக்கும் போது இதயம் கனமாகி போனது :(

ஸ்வாமி ஓம்கார் 11 July 2009 11:18 AM  

வார்த்தைகள் இல்லை கிருஷ்ணா. இதற்கு மறைமுகமாக SMS-ல் பாராட்ட மனது இடம் கொடுக்கவில்லை.

ஹாட்ஸ் ஆப்..!

Sure 11 July 2009 11:18 AM  

Arumai, Appavin arumai namakkellam averkalathu pirivil mattumay naam unerkirrom. Nantri ungal pathivu enn thanthaiyum ninavupaduthiyathu.

Prabhagar 11 July 2009 11:20 AM  

அண்ணே,

கண்களில் நீரை வரவழைத்து வீட்டீர்கள்... நெகிழ்ச்சியாக இருக்கிறது...

கனத்த மனத்துடன்,

பிரபாகர்....

☀நான் ஆதவன்☀ 11 July 2009 11:27 AM  

:( படித்ததும் மனது கஷ்டமாகிவிட்டது பரிசல்

நாமக்கல் சிபி 11 July 2009 11:31 AM  

டச்சிங்கான பதிவு பரிசல்!

நிஜமா நல்லவன் 11 July 2009 11:34 AM  

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு பரிசல்!

வெயிலான் 11 July 2009 11:58 AM  

பலதடவை படித்திருக்கிறேனென்றாலும் இப்போதும்....

அனுஜன்யா 11 July 2009 12:04 PM  

அப்பாவுக்குக் கடிதம் போலவே, இதுவும் ரொம்ப டச்சிங். உங்க home territory. அடிச்சு ஆடுங்க. வாழ்த்துகள்.

அனுஜன்யா

'இனியவன்' என். உலகநாதன் 11 July 2009 12:09 PM  

ஏற்கனவே படித்தது போல் உள்ளதே பரிசல்?????

Truth 11 July 2009 12:13 PM  

எனக்குப் புரியவில்லை. அப்பா எழுதியிருந்தா எப்படி இருக்கும் என்று நினைத்து நீங்களே எழுதிய கடிதமா?

ICQ 11 July 2009 12:39 PM  

சரிங்க “அங்கிள்” :)

நர்சிம் 11 July 2009 12:42 PM  

வெளங்கினாப்புலதான்யா.. என்னோட மீள்பதிவ பார்த்தீரா???????

நாடோடி இலக்கியன் 11 July 2009 12:53 PM  

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு பரிசல்.

டக்ளஸ்....... 11 July 2009 12:55 PM  

இதுதான் ஸ்டார் பதிவு..!

லவ்டேல் மேடி 11 July 2009 1:02 PM  

அருமையான வரிகள்....!!!
" தந்தைக் காவியம் " நல்லாருக்கு....!!!

லவ்டேல் மேடி 11 July 2009 1:03 PM  

அச்சச்சோ ... உங்களோட யாரும் சண்ட போட வரலையா....???? ப்ரீயாதான் இருக்கீங்களா....??? தெரியாமபோச்சே...........

தராசு 11 July 2009 1:13 PM  

தலைவரே என்னதிது,

கண்ணைத் தொடச்சிக்கறேன். இப்படியா அழ வைக்கிறது !!!!????

Senthil Kumar 11 July 2009 1:31 PM  

ஒரு வருடமாக உங்களைத் தொடர்ந்தாலும், பின்னூட்டமிடத் தூண்டிய பதிவுகளில் இது முதன்மை.. பகிர்வுக்கும் உணர்வுகளுக்கும் நன்றிகள்..

அன்புடன்,
செந்தில்

மணிகண்டன் 11 July 2009 2:04 PM  

super letter parisal.

குசும்பன் 11 July 2009 2:09 PM  

என்னது இன்னொரு கடிதமா??????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏன்யா ஏன்?

கோபிநாத் 11 July 2009 2:32 PM  

நெகிழ்ச்சியான கடிதம் தல ;(

நிகழ்காலத்தில்... 11 July 2009 2:40 PM  

//திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்..//

சரியான வார்த்தைகள்

//நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!//

எங்களுக்காகவும் என எடுத்துக் கொள்கிறேன்

வாழ்த்துக்கள்

பேரரசன் 11 July 2009 2:59 PM  

உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்

சூப்பர்.. சார்..

பிரிவுக்கு பிறகுதான் அவர்தம் அருமை உணகிறோம்..

வெண்பூ 11 July 2009 3:00 PM  

//
நர்சிம்
11 July, 2009 12:42 PM
வெளங்கினாப்புலதான்யா.. என்னோட மீள்பதிவ பார்த்தீரா???????
//

கிழிஞ்சது பொழப்பு... மீள்பதிவுல கூட கோ இன்சிடன்ஸா??? நர்சிம்.. இது சரியில்லை.. :))))

மங்களூர் சிவா 11 July 2009 3:42 PM  

/
உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!
/

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை நாலு சாத்து சாத்துங்க அங்கிள்!

எவனோ ஒருவன் 11 July 2009 3:44 PM  

//மற்றபடி...
இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்! //
கடைசி நேரத்துல என்னக் கட்டிப் போட்டுட்டுட்டீங்க சார்.
---
Post Comment சரியா தெரியல, தேடிப் பாத்ததுல மவுச வைக்கும்போது தெரிஞ்சது. என்னன்னு பாருங்க.

T.V.Radhakrishnan 11 July 2009 4:02 PM  

//. நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய். //

கிட்டத்தட்ட அனைத்து தந்தையர்களின் மனக்குமுறல் இப்படியாகத்தான் இருக்கும்

கிரி 11 July 2009 4:32 PM  

//அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!//

உண்மை தான்

அது ஒரு கனாக் காலம் 11 July 2009 5:01 PM  

very touching ... looks like it is a better way to bring out truths

பீர் | Peer 11 July 2009 5:03 PM  

இன்னும் ஒரு கடிதமா என்று பயத்துடணே வந்தேன்.

அசத்தல் கிருஷ்ணா,

என் தந்தையின் நினைவு வந்துவிட்டது. அடுத்த கடிதம் நீங்கள் உங்கள் தந்தைக்கு எழுதும் போது என் தந்தையின் நலத்தையும் விசாரிக்கவும். அங்குதான் பக்கத்து தெருவில் இருப்பார். என்ன கோவமோ... இதுவரை எனக்கு கடிதம் எழுதியதில்லை.

நெல்லைக் கிறுக்கன் 11 July 2009 5:19 PM  

Touching....

இன்னொரு "தவமாய் தவமிருந்து"..??

அதிஷா 11 July 2009 5:24 PM  

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...

பேருந்துக் காதலன் 11 July 2009 5:39 PM  

மனசு கனத்தது..

ஒன்று கவிதை எழுத வேண்டும்

இல்லை
கண்ணீர் சிந்த வேண்டும்.
அவன் இரண்டும் செய்தான்
டைரி நனைந்தது..!

அக்பர் 11 July 2009 6:37 PM  

அம்மாவ நல்ல கவனிங்க‌.

cheena (சீனா) 11 July 2009 7:18 PM  

அன்பின் பரிசல்

இதுதான் அனைத்துப் பெற்றோர்களின் மனக்குமுறலும். தலைமுறை இடைவெளி காரணமாய் இருக்கலாம். ஒரு வேளை பரிசல், மீரா மற்றும் மேகாவிற்கு கடிதம் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

தவிர்க்க இயலாதது

கடிதம் நன்கு அமைந்துள்ளது

நல்வாழ்த்துகள் கிருஷ்ணா

கிர்பால் 11 July 2009 11:37 PM  

நீ வர அம்மா அழுதாள்!
அம்மா வர நீ அழுதாய்! - தளபதி படத்தில் அம்மா பற்றிய பாட்டு.
அதுவே தந்தைக்கு எழுதினால் இப்படி இருக்கும்...
தந்தை வர நீ ஏங்கியிருந்தாய்!
நீ வர தந்தை ஏங்கியிருந்தார்!

இந்த பதிவைப் படிக்கும் போது இந்த உண்மை வலிக்குது...
நாளைக்கு நீங்களும் ஏங்கியிருக்க வேண்டிய தந்தை ஆகலாம்!

Seemachu 12 July 2009 8:08 AM  

நல்ல நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பா இப்படியெல்லாம் நினைப்பார் என்று உங்களால் யூகிக்க முடியுமென்றால் அவர் நினைத்தபடி நடப்பதற்கு என்ன தயக்கம் ??

சாதிக்க வயது ஒரு தடையுமில்லையே !!

அன்புடன் அருணா 12 July 2009 9:53 AM  

அருமையான உணர்வுகள்...அருமையான பதிவு..பிடியுங்க் பூங்கொத்தை!

வலைஞன் 12 July 2009 2:34 PM  

Fantastic!After Sujatha's 'Anbulla Appa',I rate this #2.Great work Krishna.Keep it up!

ராமலக்ஷ்மி 12 July 2009 4:05 PM  

அருமை.

வெங்கிராஜா 12 July 2009 7:57 PM  

//உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!//
இந்த ஆண்டு நான் கடந்துவந்த தலைசிறந்த பதிவுகளுள் இது நிச்சயம் இருக்கும். ஆழமான, அழுத்தமான பதிவு. தாங்கள் நல்ல வழிகாட்டியாகவும் இருப்பதற்கு நன்றிகள்.

நாஞ்சில் நாதம் 13 July 2009 11:10 AM  

:))))

பட்டாம்பூச்சி 13 July 2009 2:00 PM  

:(

சூர்யா 13 July 2009 11:06 PM  

en thanthai enakku ezhuthiyadhaagavae ninaikkiraen.
vaarthaigal illai...
ippadikku
petrorai pirinthu irupavan

மஞ்சூர் ராசா 20 July 2009 1:21 PM  

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாம் எல்லோருமே ஒரு விதத்தில் மிகவும் தாமதமாகத்தான் உணர்ந்துக்கொள்கிறோமோ!

நல்லதொரு பதிவு.
நன்றி.

அன்பரசன் 23 September 2009 12:27 PM  

உருக வைக்கிற மாதிரி இருக்கு அண்ணே..

ஆன்லைனில் எங்கள் புத்தகம் வாங்க...

எனது டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.


கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.

நன்றி. வணக்கம்!!!

தொடர்புக்கு...

kbkk007@gmail.com

உடன்வரும் நண்பர்கள்...

செம ‘ஹிட்’ மச்சி...!

Provided by accredited online degrees website.

About Me

My Photo
Krishna Kumar K.B.
‘என்னத்த எழுத’ என்றெண்ணாமல் எண்ணத்தை எழுதுபவன்.... (கவிதைகளில் நான் ‘அனந்த்பாலா’)
View my complete profile

Blog Archive

உங்கள் வரவே வரமாய்...