பரிசல்காரன்

ரசிப்போர் விழி தேடி...

இவனையெல்லாம் எதைக்கொண்டு அடிக்க?

இந்தப் பதிவப் படிச்சு, உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா, நம்மளைக் குத்தம் சொல்லாதீங்க! என் ‘பிரதர்’ சுப்பிரமணிதான் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழ்ல ‘எடிட்டரா? எறும்பா?’-ங்கற தலைப்புல எழுதியிருந்த இந்தப் படைப்பை (ஏண்டா, என்னா தெகிரியம் இருந்துச்சுன்னா, இதையெல்லாம் ‘படைப்பு’ ன்னு சொல்லுவ?) கொண்டு வந்து கொடுத்து, Blog-ல போடுங்கன்னான்.. இதையெல்லாம் ஒருத்தன் பத்ததிரமா வெச்சுட்டிருந்திருக்கான் பாரு.. அவனச் சொல்லணும்!
------------------------------------------------------------------------------------------------

[பரபரப்பான விஷயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நிருபரின் பார்வையில் சாதாரண நிகழ்ச்சி பரபரப்பாய்ப் பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த போது..]


நமது இதழான ‘வெங்காய தேச’த்தின் ஆசிரியர் வெள்ளைப்பூண்டு வாசுதேவன் என்பதும், அவர் ஓர் அரைக்கிறுக்கு என்பதும் அறிந்ததே. சமீப காலமாக ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நமது இதழில் அவர் எழுதுவதும் அறிந்ததே. இதனால் கோபம் கொண்ட ஆளுங்கட்சியினர் ஆசிரியர் மீது எறும்பை ஏவி கடிக்க வைத்தது மட்டும் அறியாததே. அந்த சொரசொரப்பான... ஸாரி.. பரபரப்பான சம்பவம் பின்வருமாறு:

ஆசிரியரின் துணிச்சல்


ஆளுங்கட்சியினரின் தவறுகள் யாராலும் கண்டு கொள்ளப்படாமலிருந்த போது துணிந்து எழுதிய ஒரே இதழ் நமது இதழ். முதல்வர் ‘பாவக்காய் பாலகுருநாதன்’ செய்யும் கொலை, கொள்ளை, ஊழல்கள் என்று சாதாரண சம்பவங்களையே மற்ற பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஆசிரியர் வெ.பூ.வாசுதேவன் மட்டுமே அவரது வண்டாவாளங்களை தண்டவாளத்திலேற்றினார். போன மாத இதழில் நமது ஆசிரியர் எழுதிய ‘முதல்வர் ஒரே சட்டை வேட்டியை இரண்டு நாட்களாகப் போட்டுக்கொண்ட மர்மம் என்ன?" - கட்டுரையைக் கண்டே முதல்வர் கதி கலங்கியுள்ளார். மேலும் வியாழனன்று நடந்த மாநாட்டில் முதல்வர் சட்டையின் மூன்றாவது பட்டனை, நான்காவது பட்டனுக்குரிய துளையில் தவறாகப் பொருத்திய போது-நமது புகைப்படக்காரர் ‘வெண்டைக்காய் வேணுகோபால்’ எடுத்த புகைப்படத்துடன் சென்ற இதழில் அசாதாரணத் துணிச்சலுடன் நமது ஆசிரியர் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார். (தலைப்பு ‘துளை மாறிய பட்டன்’ என்பதும் நினைவிருக்கலாம்)


முதல்வரின் கோபம்

இதையறிந்த முதல்வர் நமது ஆசிரியரை அழைத்து "பத்திரிகைகளுக்கென்றுதான் நான் எவ்வளவோ கொலை, கொள்ளை ஊழல்கள் செய்துகொண்டிருக்கிறேனே.. அதையெல்லாம் விடுத்து இவ்விஷயத்தை ஏன் எழுதினீர்?" என்று ஏசியுள்ளார். கவர்னர் ‘கத்திரி கனகவேலன்’ பேனாவை மூடாமல் பாக்கெட்டில் வைத்ததையே தைரியமாய் வெளியிட்டவராயிற்றே நமது ஆசிரியர்! இதற்கா அஞ்சுவார்? முடிந்ததை செய்யுங்கள் என்று வீரமாய்ப் பேசிவிட்டு வந்துவிட்டார்.

முதல்வர் சதி


அதனால் கோபம் கொண்ட முதல்வர் ஓர் எறும்புப் படையை நமது ஆசிரியரின் வீட்டிற்குள் செலுத்தியுள்ளார். கருணையுள்ளம் கொண்ட நமது ஆசிரியர் இது முதல்வரின் சதி என்றறியாமல் ஓர் எறும்பை எடுத்துக் கொஞ்சியிருக்கிறார். பாசத்துடன் அவ்வெறும்பிற்கு உணவூட்ட (கிறுக்குத்தனமாய்) கையில் எடுத்தபோது முல்வரனுப்பிய அந்த வஞ்சகநெஞ்சம் கொண்ட எறும்பு நமது ஆசிரியரின் மூக்கை கடித்துவிட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட நமது ஆசிரியர் அருகிலுள்ள-ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடாத-காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மிளகாய் மனோஜ்குமாரின் வசம் எறும்பை ஒப்படைக்க, அவரது புத்திசாலித்தனமான விசாரணையில் அந்த எறும்பு முதல்வரால் அனுப்பப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சபதம்

இந்த எதிர்பாராத விபத்தால் ஜப்பானின் ‘முஹியாகோமான்ஷா’ ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நமது ஆசிரியர், முதல்வர் மீது இந்தக் குற்றச்சாட்டை கூறியபோது, முதல்வர் அவ்வெறும்பை தான் அனுப்பவில்லை எனவும் இது வெளிநாட்டு சதி என்றும் கூறினாராம். இதை ஏற்காத நமது ஆசிரியர் ‘இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் ராஜினாமா செய்யும் வரை நான் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சாப்பிடுவேன்’ என்று சபதமெடுத்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------
(எல்லாம் சரி, ‘இந்தப் பதிவுக்கும் நீங்க வெச்ச தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?’ -ன்னுதானே யோசிக்கறீங்க? இந்தப்பதிவ படிச்சுட்டு நீங்க என்னைப் பத்தி நினைக்கறதத்தான் தலைப்பா வெச்சேன்!)

4 அலசல்கள்...:

Girish.K 27 May 2008 6:40 PM  

இபோதன் புரீஉது வாள் முனை வீட பேனா முனை கொடியது. உன் விரல் முனயுமா?

ச்சின்னப் பையன் 27 May 2008 8:17 PM  

மொ..மொ..மொ.. மொக்கை!!!

parisalkaaran 28 May 2008 1:04 PM  

மொக்கையில்ல.. மொக்கையோ மொக்கைன்னு நானே சொல்லிருக்கேனே!

கிரீஷ், நல்ல கற்பனை உங்களுக்கு!

விக்னேஷ்வரி 24 August 2009 9:45 PM  

இப்படியெல்லாம் கலக்கின மொக்கைப் பரிசல் எங்கப்பா.... :))))))

ஆன்லைனில் எங்கள் புத்தகம் வாங்க...

எனது டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.


கேபிள் சங்கரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக்கவும்.

நன்றி. வணக்கம்!!!

தொடர்புக்கு...

kbkk007@gmail.com

உடன்வரும் நண்பர்கள்...

செம ‘ஹிட்’ மச்சி...!

Provided by accredited online degrees website.

About Me

My Photo
Krishna Kumar K.B.
‘என்னத்த எழுத’ என்றெண்ணாமல் எண்ணத்தை எழுதுபவன்.... (கவிதைகளில் நான் ‘அனந்த்பாலா’)
View my complete profile

Blog Archive

உங்கள் வரவே வரமாய்...