முதல்வருக்கு பாராட்டு விழா நடந்துகொண்டிருந்தது. தம்பி கிரேஸி கிரி ‘யாருண்ணா தமன்னா?’ என்று கேட்டான். ‘என்னடா.. தமன்னாவைத் தெரியலங்கற?’ என்றேன். ‘நான் வேட்டைக்காரன் பார்க்கல’ என்றான்.
அனுஷ்காவையும் தெரியாது போல அவனுக்கு.
****************************************
தோசை செய்யவா.. உப்புமாவா என்று கேட்டார் மனைவி.
மனைவி செய்யும் தோசை அவ்வளவு பிடிக்கும். இருந்தாலும் ‘உப்புமா’ என்றேன்.
“ஏன்.. அதிசயமா உப்புமா-ங்கறீங்க? எனக்கு வேலை கம்மியா ஆகும்னா?” என்றார்.
“அதுவும் ஒரு காரணம். இன்னொண்ணு அதோட முதல் & கடைசி எழுத்துகள்” என்றேன்.
அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதான்!
************************************
கிரேஸிகிரியின் அண்ணன் மகேஷுக்கு ஒரு சந்தேகம் வந்ததாகச் சொன்னான் கிரி. தன்னம்பிக்கையை அதிகப்படுத்த எத்தனையோ புக்ஸ் வருதுல்ல... அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஓவர் தன்னம்பிக்கைல ஆடிகிட்டிருக்காராம். சொன்னாலும் கேட்கறதில்லையாம். அந்த மாதிரி ஓவரா இருக்கறவங்களுக்கு அதைக் குறைக்க ஏதாவது புக்ஸ் இருக்கான்னு கேட்டாரு.
தெரியலயேப்பா-ன்னு சொன்னேன்.
****************************************
நண்பரின் நண்பர் ஒருவர் மனைவிக்கு நகை வாங்கியிருக்கிறார். நேரடியாக மனைவியிடம் கொடுக்காமல், தனது அம்மாவிடம் நகையைக் காட்டியிருக்கிறார்.
“எவ்ளோடா?” - அம்மா
“நாப்பத்தஞ்சு ரூவா ஆச்சும்மா”
“ஏண்டா இதப் போய் வாங்கின? நம்ம கணேசன் கடைல ஆயிரத்து நூறுரூவாக்கு ஒரு செய்ன் பார்த்தேன். ஆறு மாசத்துக்கு கறுக்காது. இது ரெண்டே மாசத்துல பல்ல இளிச்சுடுமேடா”
“ஐயோ.. அம்மா... நாப்பத்தஞ்சுன்னா நாப்பத்தஞ்சாயிரம்மா. சுத்தத் தங்கம்மா”
சடாரென நகையை டேபிள் மேல் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாராம் அம்மா!
************************************
நேற்றைக்கு விஜய் டிவி நீயாநானாவில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் தத்தம் கணவர்களை வாங்கு வாங்கு என வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் 9000 சம்பாதிக்கும் ஒரு மனைவி, தன் 8000 சம்பாதிக்கும் கணவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தபோது காமராமேன் கருமமே கண்ணாக அந்தக் கணவனின் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அவர் கொஞ்ச நேரம் பேந்தப் பேந்த முழித்துவிட்டு ‘ஈகோதான் சார். சட்னு ஏத்துக்க முடியல. மாறறதுக்கு டைம் வேணும்’ என்றார்.
முழுவதும் பார்க்கவில்லை. என் வீட்டில் மான்குட்டீஸும், மயிலும் சண்டைபோட இடையிடையேதான் பார்த்தேன். இருந்தாலும் அந்த நிகழ்ச்சி ஒளி/ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வதையும், வீட்டில் என்ன ஆச்சோ என்பதையும் நினைக்க பதைபதைத்தது.
ஒன்றுமாகாமல், சரவணபவனில் ரோஸ்ட், காஃபி சாப்பிட்டுவிட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டே போன தம்பதிகள் புண்யாத்மாக்கள்!
**********************************************
கலைஞர் டிவியில் திங்கள்-டூ வியாழன் இரவு 10 மணிக்கு விசாரணை தொடர் தவறாமல் பார்க்கிறேன். ராஜேஷ்குமார்! வாரம் ஒரு கதை.
9.30க்கு சன் டிவியின் ‘செல்லமே’வில் ராதிகாவை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, 10 மணிக்கு கலைஞர் டிவியில் வந்து கலக்கும் சாக்ஷிசிவா, விவேக் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம்! (கொஞ்சம் கனம் - ஆனாலும் கச்சிதம்!). எல்லா சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்திற்குக் கணவராய் வந்து கொண்டிருக்கிறார். நிறைய பெண் ரசிகர்களை சம்பாதித்திருப்பார். அதனால்தானோ என்னவோ, சென்ற வாரம் விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் இவரது திருமணத்தை ஒளிபரப்பி, தன்னைக் காத்துக் கொண்டார்!
பேசியதில் நிறைய பேருக்கு ராஜேஷ்குமாரின் இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை என்பதால், இந்த வெளம்பரம்!
*****************************************************
கொஞ்சம் ட்விட்டர் அப்டேட்ஸ்:-
ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்
மறுபடியும் கலைஞருக்கு விழாவாம். எதற்கு என்று கேட்டேன்: கலைஞர் டிவிக்கு அடுத்த மாசம் ரெண்டு சண்டேக்கு ப்ரோக்ராம் எதும் கிடைக்கலையாம்!
இன்றைக்கு பின் தேதியிட்ட காசோலை ஒன்றைக் கொடுத்தால் அதை முன் தேதியிடப்பட்ட காசோலை என்று ஏன் சொல்கிறார்கள்? #டவுட்டு
ஆஃபீஸ் வந்தவுடன் ஒரு நண்பர் ‘நான் வந்த பஸ் செம ஸ்பீடு. எங்கயுமே நிக்கல’ என்றார். குதிக்கும்போது அடிபடலையா என்றேன். அவருக்குப் புரியவில்லை.
//செம்மொழி மாநாட்டை ஒட்டி ஒரு மலர் வெளியிடுகிறார்கள். // ஒட்டி விட்டா எப்படிப் படிப்பாங்க? #லொள்ஸ்
ஷாரூக்கான் My Name Is Khan என்பதற்கு பதிலாக My Name Is Ram என்று வைத்திருந்தால் ‘மோர் உதைக்கறே’ என்ன பண்ணிருப்பார்?
விஜய் டிவில நடந்துட்டே பேசற கோபிநாத் ஒரு நிகழ்ச்சில மட்டும் நின்னுகிட்டு பேசறாரு.. ஏன்னு பார்த்தேன்.. நிகழ்ச்சி பேரு ‘நடந்தது என்ன?’வாம்..
பலருடைய பதிவுகளைப் படிக்கும்போதுதான் மௌஸில் ஸ்க்ரோல் பட்டன் வைத்தவனைப் பாராட்டத் தோன்றுகிறது! #வாய்க்கொழுப்பு
நண்பரின் ப்ரொஃபைலில் Business என்றிருந்தது. என்ன பிஸினஸ் என்று கேட்டதுக்கு மெட்ரிக் பள்ளி வைத்திருப்பதாய் சொன்னார். வருத்தமாக இருக்கிறது.
முன் செல்லும் பைக்கின் பின்னிருக்கும் ஃபிகரை ரசிக்கும்போதுதான், என் மனைவியுடன் செல்கையில் அவர் வேகமாப் போங்க என்பதன் அர்த்தம் புரிகிறது
KINGSXI PUNJABஐ HEROHONDA வாங்கியாச்சு. மொதல்ல அதை PREETY ZINTA வெச்சிருந்தாங்க என்றான் நண்பன். எனக்கு கரகாட்டக்காரன் நினைவுக்கு வந்தது.
*****************************************
மிக ரசித்த எஸ்ஸெம்மெஸ்:-
ஏதாவது தப்புதண்டா செய்கிறீர்கள் என்றால் சச்சின் விளையாடும்போது அதைச் செய்யுங்கள். அந்த நேரத்தில்தான் எதையும் கவனிக்காமல் கடவுள் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்.
.
மகளிர்க்கு மகளிர் தின வாழ்த்துகள். ஆடவர்க்கு, மகளிரை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
.
அவியல் 08.03.2010
பாதசாரி - தமிழினி

“சார்.. ஒரு சிசர் ஃபில்டர் 2 ரூவா. பாக்கெட் 20ரூவா வருது. ஒரு நாளைக்கு பத்தாவது பிடிக்க மாட்டீங்களா? அதுவும் ஃப்ரெண்ட்ஸ், கெட் டுகெதர்ன்னா ஒரு பாக்கெட் சடார்னு காணாமப் போயிடும்.. எப்படிப் பார்த்தாலும் மாசம் 300 ரூவா செலவு பண்ணுவீங்களா இல்லையா? இதுக்கு வெறும் 240 ரூவாதான் சார் வருது... அதுவும் வருஷத்துக்கு...”
-இப்படியெல்லாம் ஆரம்பித்து ஒரு நல்ல புத்தகத்துக்கு சந்தா கட்டச் சொல்லி யாசிப்பது தமிழ்ச்சூழலில்தான் நடக்கும். நடக்கிறது.
பாதசாரி - சுஜாதா ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர். அதனால்தான் நான் கவனிக்கலானேன். கவனித்து என்ன செய்தேன் என்றால் ஒன்றுமில்லை. அதன்பிறகு இவர் பெயர் விஸ்வநாதன் என்றறிந்து ந.விச்வநாதன், விருத்தம் விச்வநாதன் எல்லாம் இவரோ என்று கொஞ்சகாலம் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பிறகொரு நாளில் ஒரு தளத்தில் காசியை வாசிக்க நேர்ந்தது. பித்துப் பிடித்தது. யுவகிருஷ்ணா அதைப் பற்றி பதிவெழுதி பற்ற வைத்துவிட்டார். கலைஞன் என்பவன் உலகிற்கே சொந்தமானவன் என்றறிகிற போதும் ‘பாதசாரி கோயமுத்தூராமே’ என்று கேள்விப்பட்டபோது டீஷர்ட்டைக் கழட்டி வைத்துவிட்டு, சட்டை மாட்டிக்கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்!
நீங்களும் காசியை கூகுளில் தேடிப் படிக்கலாம். பிராயச்சித்தமாக அவர் ஆசிரியராக இருக்கும் தமிழினிக்கு ஒரு சந்தா கட்டிவிடுங்களேன்.. 240 ரூபாய் மட்டுமே!
‘மனநிழல்’ என்ற தலைப்பில் பாதசாரி எழுதும் பத்தி எழுத்துக்காக மட்டுமில்லாமல் ஒரு நல்ல பத்திரிகையைப் படித்த திருப்தியை மாதந்தோறும் உணர - மறக்காமல் உங்கள் சந்தாவைச் செலுத்தி, ஒரு பத்திரிகை தடுமாறும் சூழலிலிருந்து மாற்ற அதற்கு கைகொடுத்து உதவுங்கள்.
ஓராண்டு சந்தா மட்டும்தான். ஆயுள் சந்தா என்பது யார் ஆயுளுக்கு என்ற சந்தேகத்து இடமளிப்பதாலும், யார் ஆயுளும் சாஸ்வதமில்லா நிலையில் அது தேவையில்லை என்பதாலும் - இல்லை என்கிறார் நண்பர்.
சந்தாவைச் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்:
K.Selventhiran
615201507730
ICICI Bank
Ramnagar Branch
Coimbatore
முக்கியமாய் செய்ய வேண்டியது: வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவுடன் செல்வாவுக்கும் (k.selventhiran@gmail.com) எனக்கும் (kbkk007@gmail.com) பணம் செலுத்திய விபரத்தை உங்கள் முகவரியுடன் அனுப்புங்கள். ரசீதுடன் ஒரு நல்ல சிற்றிதழின் வளர்ச்சிக்கு உதவியதற்கு எங்கள் அன்பையும் கூரியரில் அனுப்புகிறோம்.
பாதசாரியின் காசி கதை பற்றிய யுவகிருஷ்ணாவின் பதிவுக்கு இங்கே க்ளிக்குங்கள்.
பாதசாரியின் கவிதைகள் பற்றிய யாத்ராவின் பதிவு:- இதோ
தமிழினி சந்தாவுக்காக செல்வேந்திரன் எழுதிய பதிவு:- இங்கே
பாதசாரியின் மீனுக்குள் கடல் புத்தகம் பற்றிய பேரின்பாவின் பதிவு:- இங்கே
நன்றி.
.
ஹ..ஹ...ஹ.... ஹா.... ஹா....ஹாக்கி!

அப்போதெல்லாம் அரசுப்பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். பத்தாவது வரைக்குமா, பனிரெண்டாவது வரைக்குமா என்று சரியாக நினைவில்லை. பூப்பந்து, கைப்பந்து என்று ஒரு சில விளையாட்டுகள் இருந்த நிலையில் P.T. Period போரடிக்க, எங்கள் பி.டி. மாஸ்டர் ஹாக்கி விளையாடலாம் என்றார். எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் விளையாடி ஹாக்கியின் மேல் கொஞ்சம் பிடிப்பு வந்திருந்த சமயம்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விளையாட்டின் போது கால் எலும்பில் எதிராளி வேண்டுமென்றோ/வேண்டாமென்றோ அடித்ததில் மரண வலி. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு ஹாக்கியென்றாலே தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன். பிறகு விளையாட ஆரம்பத்த போது அதே ‘நண்பன்’ அதே மாதிரி தாக்கினான். இந்தமுறை ‘ஸாரிடா.. வேணும்னு பண்ணல. உன்னை சும்மா பயப்படுத்த வீசினேன். பட்டுடுச்சு’ என்றான். ‘சரி.. நான் பாலை பாஸ் செய்கையில் எனக்கெதிராய் ஹாக்கி மட்டை உயர்த்தப்படும்போதே எனக்கு பயம் வர ஆரம்பிக்கிறது இது சரியில்லை’ என்று அந்த விளையாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, முற்றிலுமாக விளையாடுவதே இல்லை!
************************
ப்ளஸ் டூ விடுமுறை. நண்பர்களுடன் ஒரு கேரம் க்ளப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். மாலை ஆறரை/ஏழு இருக்கும். கரண்ட் கட்டானதில் ஒரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன் கோவத்தில் மிகக் கடுமையான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்க்கிறான். உடனே க்ளப்பில் பணிபுரியும் ஒரு சிறுவன் ‘ண்ணே.. வார்த்தை பேசாதீங்ணே.. ’ என்கிறான். ‘நீ மூடிகிட்டு இருடா #@$#@$” என்று அவனுக்கும் ஒரு கெட்ட வார்த்தை பார்சல் செய்கிறான். வேறொரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்தவர் இடையில் புகுந்து ‘இத்தனை பேர் இருக்கோம்.. க்ளப்புக்குள்ள வார்த்தை பேசறது சரியில்லைன்னு பையன் சொல்றான். அவனையும் திட்டறான் பாரு.. யார்யா அது?’ என்கிறார். அவர் அந்த க்ளப்பின் ரெகுலர் வருகையாளர். நான் பார்த்ததுண்டு. முகம் முழுதும் காதல் தண்டபாணி போல பள்ளங்களாக இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு சின்ன சிரிப்பு சிரிப்பார். அவர் போர்டில் ஸ்டரைக்கரை வைத்தவுடன் சடாரென சுண்டி காய்ன்களைப் பாக்கெட்டில் தள்ளுவதை வியப்போடு பார்ப்பதுண்டு.
அவர் அப்படிச் சொன்னதும் கெட்ட வார்த்தை சொன்னவனுக்கு கோவம் சுர்ரென்று வருகிறது. ‘அது யாருடா நாட்டாமை?’ என்கிறான். போதையில் இருந்தான் என்பது பின்னர் தெரியவந்தது. அவன் அப்படிக் கேட்டதும் ‘வெளில வாடா’ என்றபடி அந்த ரெகுலர் ப்ளேயரும், அவர் நண்பர்களும் அவனைக் காலரைப் பிடித்து இழுக்க, அவனது நண்பர்கள் தடுக்க.. எல்லாருமாய் வெளியில் ஓடுகிறார்கள்.
பயந்தபடி அமர்ந்திருந்த நானும் எனது நண்பர்களும் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு வெளியில் போய்ப் பார்த்தபோது, ஒரு சில மண்டைகள் தாக்கப்பட்டு ரத்தச் சிதறல்களோடு முகங்கள் தெரிய நான்கைந்து பேரின் கைகளில்....... ஹாக்கி மட்டைகள்!
அன்றிலிருந்து இன்று வரை பல இடங்களில், சீரியல்களில், திரைப்படங்களில் பார்த்துவிட்டேன்.. ஹாக்கி மட்டையை அடியாட்களின் ஆயுதமாகவேதான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு ஹாக்கி மீது பெரிய ஆர்வமோ, பற்றோ வரவில்லை. அவ்வப்போது ‘இது நம் தேசிய விளையாட்டு’ போன்ற பூர்ஷ்வாத்தனங்களால் பார்க்கத் தோன்றும். ஆனாலும் மனது ஒட்டாது!
தவிரவும் அதன் ஒளிபரப்புக் குழப்பங்கள். முதல் பாக்-இந்திய மேட்சில் இந்தியா போட்ட நான்கு கோல்களை எத்தனை முறை பார்த்தாலும் பந்து கண்ணில் படவே இல்லை. இதுவே கிரிக்கெட்டில் தெள்ளத்தெளிவாகக் காட்டப்படுகிறது. இதில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரீப்ளேக்கள் இல்லை. வர்ணனை ஜாலங்கள் இல்லை. (இதன் பின்னே உள்ள அரசியலை அழகாக எழுதியிருக்கிறார் சீனியர் பதிவர் தராசு! இங்கே போய்ப் படியுங்கள்)
போதாக்குறைக்கு பாஸ்கரன் போன்ற இந்திய கோச்களின் பேட்டிகள் வேறு எரிச்சலூட்டுகின்றன. ‘இந்தியா ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை’ என்பதை பேட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிவிட்டு இறுதிப்பத்தியில் ‘இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று மனசு சொல்கிறது’ என்று போனால் போகட்டும் பாணியில் சொல்லியிருக்கிறார். இவரை வைத்துக் கொண்டு ஜெயிப்பதா.. ம்ஹூம்!
இதில் அரசியல்கள் வேறு... யாராவது கொஞ்சம் விளையாடி பேர் வாங்கினால் சஸ்பெண்ட்! சம்பளப் பிரச்சினை. வீரர்களும் முழுவெறியோடு விளையாடுகிறார்களில்லை. நேற்றைய போட்டியின் ஆரம்பம் முதலே மந்தம்தான். ஆஸிக்காரர்களின் கோல் போஸ்ட் இருக்கும் திசையையே பந்து பார்க்கவில்லை. கொஞ்சம் அந்தப் பக்கம் போவது போல இருந்தாலும் நான்கைந்து பேர் சூழ, விரட்டி அடிக்கிறார்கள். பரிதாபமாக இருந்தது. (ஆமா.. அந்தப் போட்டில ஆஸிக்காரர்கள் வாயில் கறுப்பாய் எதையோ வைத்தபடி விளையாடினார்களே.. அடிபடாமல் இருக்கத்தானே.. அதெல்லாம் நம்மாளுக கிட்ட இல்லையா?)
இத்தனை பிரச்சினைகள் இருக்க.. இன்னமும் ஏன் ஹாக்கியை தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? அதைக் கிரிக்கெட்டுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கிறதா?
ஐயகோ.. என்ன இது?’ என்று கூச்சல் போடாதீர்கள்.
தியான் சந்தைத் தெரியுமா?
பத்மபூஷன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர். 1926ல் நியூஸீலாந்தில் நடைபெற்ற ஹாக்கி சீரிஸில் 21 போட்டிகளில் 18ல் இந்தியாவுக்கு வெற்றி. மொத்தமாய் இந்திய அணி போட்ட 192 கோல்களில் 100 கோல்கள் தியான்சந்த் போட்ட கோல்கள். லண்டனில் 1927ல் நடந்த தொடரில் மொத்த கோல்கள் 72. தியான்சந்த் போட்டவை 36! 1928ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம். அந்த ஃபைனலில் 3ல் இரண்டு கோல் தியான்சந்த் போட்டார். 5 மேட்ச்களில் தியான்சந்த் போட்டவை 14 கோல்கள்!
அதே போல 1932ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்கிலும் ஹாக்கிக்கான தங்கம் இந்தியாவுக்கு. (ஒலிம்பிக்கிற்குப் பிறகு இங்கிலாந்து, ஹாலந்து ஜெர்மனி என்று அந்தப் பயணத்தில் அவர்கள் விளையாடியது 37 போட்டிகள். 34ல் இந்தியா வெற்றி. 2 டிரா. 1 போட்டி கைவிடப்பட்டது!)
1934ல் நியூஸிலாந்து, சிலோன், ஆஸியுடனான டூரில் 48 போட்டிகள். எல்லாவற்றிலும் வெற்றி. மொத்தம் 584 கோல். (வாங்கியது வெறும் 40 கோல்!) அதில் 201, தியான்சந்த் போட்ட கோல்கள்!
1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ்ஃபைனலில் இடைவேளை வரை ஒரே கோல்தான் ஜெர்மனிக்கு எதிராக. இடைவேளையின்போது தனது ஷூவைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கால்களோடு ஆடுகிறார் தியான்சந்த். எட்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்துகிறது இந்தியா. அந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்தியாவுக்கு எதிராக விழுந்த ஒரே கோல் ஃபைனலில் ஜெர்மன் போட்ட அந்த கோல் மட்டும்தான்!
அடால்ஃப் ஹிட்லர் இவரது ஆட்டத்தைக் கண்டு வியந்து இந்திய ராணுவத்தில் இவர் வகித்ததைப் போலவே பெரிய பதவியை ஜெர்மன் ராணுவத்தில் தருவதாய்ச் சொல்லி அழைத்தார். இவர் மறுத்துவிட்டார். டான் ப்ராட்மேன் ‘நான் கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்பதற்குச் சமமாய் ஹாக்கியில் கோல் போடுகிறார் இவர்’ என்று வியந்தார் தியான்சந்தைப் பார்த்து.
கடைசியில்?
1979ல் லிவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, பண உதவிக்கு அரசு கைவிரிக்க, சரிவர கவனிக்கவும் ஆளில்லாமல் புதுடெல்லியின் AIIMS மருத்துவமனை ஜெனரல் வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்!
ஹாக்கியாம் தேசிய விளையாட்டாம்.. ஊக்குவிக்கணுமாம்....
போங்கய்யா...
.
Labels: Dhyanchand , Hockey , Indian Hockey
